Tuesday, September 28, 2010

பணம் தேடும் ஆசையில் பறிபோகும் உறவுகள்..!



"குடும்பம் ஒரு கோயில்" என்ற நம் கலாசாரத்தின் ஆணிவேர் நம்பிக்கை மெள்ள மெள்ள உருமாறி, உருக்குலைந்து கொண்டு இருக்கிறதோ என்கிற பயம் கலந்த கேள்வியை எழுப்புகிறது தொடர்ந்து செய்திகளில் அடிபடும் கணவன் - மனைவி உறவுச் சிக்கல்கள்.

"தவறான குடும்ப உறவுகள், அதைத் தொடர்ந்து குடும்ப அமைப்புக்குள் வரும் பிரச்னைகள் குறித்த புகார்கள்தான் காவல்துறையில் அதிகம் பதிவாகின்றன" என்கிறார் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர். குடும்பநல ஆலோசனை மையங்களிலும் இந்த 'ஒருவன், ஒருத்தி எல்லை தாண்டிய பிரச்னை'தான் அதிகமாக ஆக்கிரமித்து இருக்கிறது என்கிறார்கள் இந்தத் துறை நிபுணர்கள்.

ஏன் இந்த உறவு சிக்கல்கள்... இத்தனை உறவுச் சிக்கல்கள்?!

நிபுணர்கள் தரும் பதில்கள்... நம் கேள்வியின் அவசியத்தையும், அதற்கான தீர்வின் அவசரத்தையும் வலியுறுத்துகின்றன.

சமூகநீதி மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக 30 ஆண்டுகளாக தளராது குரல் கொடுத்து வரும் பேராசிரியை சரசுவதி, "ஒருவனுக்கு ஒருத்தி என்கிற சமூக ஒழுக்கம், நாகரிகத்தின் உச்ச வளர்ச்சி. ஆனால், இன்று ஆண்-பெண் இருவருக்குமே இதுவரை சமூகம் கடைபிடித்து வந்த கட்டமைப்பை மீறுவதற்கான நிறைய வாய்ப்புகளும், வசதிகளும் பெருகிவிட்டன. சமூகத்திலும் முன்பு இருந்த இறுக்கம் சில விஷயங்களில் தளர்ந்திருக்கிறது. அதை எதிர்மறையாக பயன்படுத்திக் கொள்பவர்கள், எல்லை மீறி, குடும்பச் சூழலை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.

'அவன், அதனால் இப்படிச் செய்தான்', 'இவள், இதனால் இந்த நிலைமைக்கு ஆளானாள்' என்று தனி நபர் பிரச்னையாகப் பார்க்காமல், பெருகிவரும் இந்த பொதுப் பிரச்னையின் சமூக, பொருளாதார, அரசியல் காரணங்கள் என்ன என்பதை ஆராய வேண்டியதும், அதிலிருந்து மீள்வதற்கு வழி காட்டுவதும் சமூகத்தின் பொறுப்பு" என்று வழிகாட்டினார்.

"பாவம், புண்ணியம் போன்றவற்றில் நம்பிக்கை குறைந்து வருவதே இந்த உறவுச் சிக்கல்களுக்குக் காரணம்" என்று யதார்த்தமாக ஆரம்பித்தார் ஆன்மிக சொற்பொழிவாளர் 'நாகை' முகுந்தன்.

"பெரிய அளவில் பொருளாதார மாற்றங்கள் வருவதற்கு முன்பு தனிநபர் ஒழுக்கம் பெரிய விஷயமாக வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்று கடவுள் பக்திகூட வியாபாரம் ஆகிவிட்டது.

ராமாயணம் போன்ற இதிகாசங்களில் 'பிறன் மனை நோக்காமல் இருப்பதுதான் பேராண்மை' என்று போதிக்கப்பட்டது. இன்றைய டி.வி, சினிமா போன்ற ஊடகங்களில் முறை தவறும் ஒழுக்கம்தான் வாழ்க்கையில் பிழைப்பதற்கான வழி என்று திரும்பத் திரும்பக் காண்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அதையெல்லாம் பார்ப்பவர்களின் மனநிலை, சிந்தனை என்னவாகும்?

இரண்டாவது காரணம், முந்தைய தலைமுறை மனிதர்கள் 'மானம் பெரிது' என்றார்கள். இன்றைய தலைமுறைக்கு 'பணம்தான் வாழ்க்கை' என்றாகிவிட்டது. பணத்தைத் தேடி ஒடிக்கொண்டே இருப்பதால், வீட்டுக்குள் ஒவ்வொருவரும் ஒரு தீவாக வாழ்கிறார்கள். இந்த வாழ்க்கை முறைதான், பிரச்னைகளின் மூலகாரணம். 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்கிற தீர்மானத்தைவிட 'எப்படியும் வாழலாம்' என்கிற மனநிலையை வளர்க்கும் சூழ்நிலைகள் பெருகி வருவதும், அதை எப்படி எதிர்கொள்வது என்பதை போதிக்கும் வழிமுறைகள் வீடு, கல்விக்கூடம் என எங்கும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்" என்று பிரச்னையின் அடிநாதத்தை தொட்டார் முகுந்தன்.

"ஒரு சமூகம் பொருளாதாரத்தில் பெரிய மாறுதல்களை அடையும்போது இந்த மாதிரியான சமூக சிக்கல்கள் உருவாகத்தான் செய்யும்" என்று நிதர்சனமாக ஆரம்பித்த 'மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்' வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடாசலபதி, "கடந்த 10, 12 வருடங்களாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகப் பெரிய அளவிலிருக்கிறது. தொழில் புரட்சி ஏற்பட்டபோதுகூட இத்தனை வளர்ச்சி இருந்ததில்லை. இம்மாதிரியான வளர்ச்சியில் பணப்புழக்கம் அதிகமிருக்கும்; நுகர்வுக் கலாசாரம் அதிகமாகும்; நகரமயமாதல் விரிவடையும்; பயணங்கள் அதிகரிக்கும். கூடவே இடம் பெயருவதும் அதிகரிக்கும்.

அதேசமயம்... ஓய்வு, நட்பு, குடும்பப் பிணைப்பு எல்லாமே குறைய ஆரம்பிக்கும். பிணைப்பு தளரும் சமூகத்தில் உறவு சார்ந்த பிரச்னைகள் அதிகம் வரும். முன்பு ஒரு சமூக அடையாளத்துடன் இயங்கி வந்தவர்கள், இன்று தனிநபர் அடையாளத்துடன் இயங்குவதும், குடும்பத்துடன் இல்லாமல் தனித்து வாழ்வதும் இம்மாதிரியான பிரச்னைகளை அள்ளித் தெளிக்கும்" என்று நடைமுறையை உடைத்துக் காட்டினார் வார்த்தைகளால்!

குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள் என்ன, கணவன்-மனைவி உறவு இதயத்துக்கு இணக்கமாகவும், உறவுக்கு இறுக்கமாகவும் இருக்க வழிகள் என்ன என்ற கேள்விகளுக்கு பதில் தந்தார் டாக்டர் ஷாலினி.

"ஆண், பெண் இருபாலருமே தங்களுக்கான எல்லையைக் கடந்து வரும்போது உறவுச் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு ஆணின் மனநிலையும் பெண்ணின் மனநிலையும் முற்றிலும் வேறானவை. 'என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் தானே உழைக்கிறேன்' என்று நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதும், சம்பாதிப்பதும்தான் கௌரவம் என ஆண் நினைக்கிறான்; அதுதான் சந்தோஷம் என நம்புகிறான்.

ஆனால், ஒரு பெண், ஆணின் 'உடல்தேவை' சார்ந்த அருகாமையைவிட அவன் அன்பும், பாசமும்தான் பெரிது என்று நினைக்கிறாள். நிறைய குடும்பங்களில் பிரச்னையே, 'என் கணவர் என்கூட உட்கார்ந்து பேசுவ தில்லை, எனக்காக நேரம் செலவிடுவதில்லை' என்பது தான். அந்த குறைந்தபட்ச எதிர் பார்ப்பு தொடர்ந்து நிறைவேறா மல் போக, அந்த எதிர் பார்ப்பை யார் பூர்த்தி செய்கிறார்களோ அவர்களை நம்பி எல்லை தாண்டுகிறாள்.

அடுத்த காரணம், ஆண், பெண் இருவருக்கும் நடக்கும் இளவயது திருமணங்கள். சிறுவயதில் பொருத்தமில்லாத ஒருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட வயதுக்கு அப்புறம் அவர்களது ஆழ்மன விருப்பத்துக்கு ஏற்ற ஒருவரைப் பார்க்கும்போது மனம் தடுமாறுகிறார்கள். அதேபோல் அதீத எதிர்பார்ப்புடன் திருமண பந்தத்தை உருவாக்கி, அந்த எதிர்பார்ப்பில் பலன் பூஜ்யமாகிப் போகும்போது அடுத்த உறவை நாடுகிறார்கள். உளவியல் ரீதியாக இந்த காரணங்கள் உறவுச் சிக்கலை எண்ணெய் ஊற்றி வளர்க்கின்றன. இதைத் தொடர்ந்து விவாகரத்துகள் அதிகரிக்கும், தனித்து வாழும் பெண், ஆண் எண்ணிக்கை அதிகரிக்கும். பிரச்னைகளும் அதிகரிக்கும்.

இம்மாதிரியான ஒரு சூழல் பிரிட்டனில் உருவாகிய போது அந்த அரசு, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, கணவன்-மனைவி உறவும், அவர்களின் தாம்பத்ய வாழ்வும் திருப்தியாக இருக்க 'லவ்வர்ஸ் கைடு' என்ற வழி காட்டி புத்தகத்தையும், சி.டி-யையும் வெளியிட்டது!" என்று சொல்லி யோசிக்க வைத்தார்.

குடும்பத்தைக் கட்டிக் காப்பது கணவன், மனைவி கடமை. அதேபோல் குடும்ப அமைப்பு பெருமளவில் சிதையும்போது, ஜப்பான், பின்லாந்து, நார்வே, சிங்கப்பூர் நாடுகளைப் போல் இந்த குடும்ப அமைப்பை காப்பதற்கான வழி வகை செய்வது, அரசின் தார்மிகக் கடமை!

வாழ்க்கை இனிக்க பிராக்டிகல் வழிகள்...
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால், 'யார் சரி?' 'யார் தவறு'? என்ற போட்டி மனப்பான்மையில் சண்டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாராவது ஒருவர் உடனே முற்றுப்புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனிமையான தொடர்கதையாக்கும்!

நம் சமூகத்தில், மனைவி தன்னை 'ஸ்பெஷலாக' கவனிக்க வேண்டும் என்று எல்லா ஆண்களும் எதிர் பார்க்கிறார்கள். குழந்தை, தாய் வீட்டுப் பிரச்னைகள், ஆபீஸ் வேலைகள் என்று மனைவி பிஸியாக இருந்துவிட்டு, கணவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு தராதபோது... கணவர் கண்ணியம் மீறுகிறார். அதற்கு வாய்ப்புத் தராமல் இருந்து விடுவதே 'வாழும் கலை'.

கணவன்-மனைவி இருவரில் ஒருவர் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகம் நாட்டம் உள்ளவராக இருந்து, மற்றொருவர் அந்த நாட்டத்துக்கு இணையான ஜோடியாக இல்லாமல் போகும்போதுதான் பிரச்னைகள் பூதாகாரமாக எழுகின்றன. விரிசல்கள் ஆழமாகின்றன. அந்தரங்கத்துக்கும் அன்புடன் நேரத்தை ஒதுக்குவது காதலை வெல்லும் வழி.

நம் குடும்ப அமைப்பில், கணவரின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை புண்படுத்துவதை ஒரு கணவரால் தாங்கிக் கொள்ள இயலாது. குறிப்பாக, அவரின் அம்மாவை இன்சல்ட் செய்து விட்டால், அவர் மனரீதியாக மிகவும் பாதிப்படைகிறார். அது, இல்லற வாழ்க்கையில் வன்முறையாக எதிரொலிக்கும். எதற்கு வன்முறைக்கு வழி செய்ய வேண்டும்..?
 

Monday, September 27, 2010

இதுதாண்டா மெகா சீரியல்


கிட்ட தட்ட இது ஒரு தொற்று வியாதி
எப்போதும் உங்களை ஒரு பரபரப்புலேயே வச்சிட்டு இருப்பாங்க...
எத்தனை வருஷம் கழிச்சு பார்த்தாலும் புரியும்,
பார்த்தா கண்டிப்பா  அழுகை வரணும்

பயங்கரமான ஒரு டர்னிங் பாயிண்ட்ல தொடரும் போட்டு உங்கள பிரசர் ஏத்துவாங்க.. நீங்களும் அதே பரபரப்புல இருந்துட்டு அடுத்த நாள் பார்க்கும் போது... அந்த டர்னிங் பாயிண்ட் ஒரு முட்டுச்சந்து மாதிரி புஸ்ஸுன்னு போய்டும்..( ஆனா இதுக்காக நீங்க உங்க வீட்டுல டென்சன் ஆகவே இருந்து இருந்து வீடே  ரணகளம் ஆயிருக்கும்)

சில நேரங்களில் சில நிகழ்ச்சிகள் உங்க வீட்ல நடந்ததா... இல்ல அந்த சீரியல்ல நடந்ததானு  உங்களுக்கே தெரியாது..

சினிமால கூட நீங்க பார்க்காத வில்லத்தனம் எல்லாம் இருக்கும்

எதுவுமே நம்புற மாதிரி இருக்காது... ஆனா நம்பித்தான் ஆகணும்

கிட்டத்தட்ட ஏதாவது ஒரு ஸீன் எல்லா சீரியல்லயும் வரும்...

முதல் தலைமுறையில் ஆரம்பிச்சு மூன்றாவது தலைமுறையில் முடியும். ஆனா அதுக்கப்புறமும் இரண்டாம் பாகம் ஆரம்பிக்கும் வேற பேருல...
ஆரம்பத்துல இருந்த கதைக்கும் முடிவுல இருந்த கதைக்கும் சம்பந்தமே இருக்காது, அதனால அடுத்த தலைமுறைக்கு  கதை புரியறதுல சிரமம் இருக்காது

பணக்கார வில்லன் / வில்லி  கெட்டவங்களாவும்   ஏழை ஹீரோயின் நல்லவளவும் இருப்பாங்க. தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இருக்காது. அழுவதற்கென்றே சில கேரக்டர்ஸ் இருப்பாங்க..

பி.கு: இந்த மெகா சீரியல் பார்க்கிறதுல ஒரே ஒரு நன்மை என்னன்னா  நீங்க வாட்ச்சே பார்க்காம கரெக்டா டைம் சொல்லுவீங்க...

Monday, September 20, 2010

நித்தியானந்தா செய்த தவறின் ஆணிவேர் எது?


அன்பானவர்களே இன்று நாம் ஊடகங்கள் வாயிலாக இளம் சந்நியாசி நித்தியான்ந்தா என்ற வாலிபரைப்பற்றி சில விரும்பத்தகாத செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, இன்று இப்படிப்பட்ட சம்பவங்களின் ஆணி வேரைப் பற்றி வேத வெளிச்சத்தில் ஆராயப்போகிறோம்
மனிதர்கள் இன்று சம்பாதிப்பதற்காகவோ, அல்லது ஆர்வக்கோளாறினாலோ, மிக இளம் வயதிலேயே சந்நியாசி ஆகிவிடுகிறார்கள், ஆனால் இப்படி சந்நியாசி ஆவதாலேயே அவர்கள் புது மனிதர்கள் ஆகிவிடுவதில்லை, காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு பசி, கோபம், மகிழ்ச்சி, போன்ற கடவுள் மனிதனுக்குக் கொடுத்த உணர்வுகளில் ஒன்றான பாலுணர்வும் இயற்கையாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் வேதம் மிகத்தெளிவாக நமக்கு சொல்லுகிறது. அது மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதி2;18).
ஒருவேளை மனிதன் இந்த வேத வார்த்தைக்கு புறம்பாக நடக்க ஆரம்பிக்கும் போது, அங்கே கடவுளை மறுத்து சாத்தானை தன் வாழ்வில் அனுமதிக்கிறான். இது எப்படி எனில், வெளிச்சம் உள்ள இடத்தில் வெளிச்சத்தைத் தடுத்தால் தானாகவே இருள் வந்துவிடும் அப்படியே சாத்தான் கடவுள் இல்லாத இட்த்தில் நுழைகிறான்.
இங்கு சாத்தானின் குணநலன்கள் குறித்து வேதம் தெளிவாக ஒரு காரியத்தை சொல்லுகிறது அவன் திருடன் (யோவான் 10;10) என்று, இப்படிப்பட்ட திருடன் வரும்போது இயற்கைக்கு மாறான காரியங்களில் மனிதனை ஈடுபடுத்துகிறான், இதுவே மேலே நாம் பார்த்த விரும்பத்தகாத செய்திகள் ஆகும்.
அப்படியானால் இயற்கையான முறையில் பாலியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும், பைபிள் மிக மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது நீதிமொழிகள் 5;18-19, ஆகிய வசனங்களில் மனைவியோடு மட்டுமே இந்த காரியங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகிறது, இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் அது என்னவெனில் ஆதியாகமம், 2;19 மற்றும் நீதிமொழிகள் 5;18-ன் படி, துணை என்பது ஒருமையே தவிர பன்மை கிடையாது, ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட துணைகளும் சாத்தானின் திட்டமே ஆகும்,
அப்படியானால் துனையை இழந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதற்கும் வேதம் மிகத்தெளிவாக நமக்கு பதில் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 7; 36 மற்றும் 7;39 ஆகிய வசனங்களின் படி துணையை இழந்தவர்கள் அதாவது துணை மரித்துப் போனவர்கள், தங்கள் பாலுணர்வின் நிமித்தம் தங்களைப் பரிசுத்தக் குறைவு அடையாமல் பாதுகாத்துக்கொள்ள விதவை மறுமணத்தை ஆதரிக்கிறது, மேலும் முக்கியமான ஒரு செய்தி என்னவெனில் துணை உயிரோடு இருக்கும் போது அவர்களை விட்டுவிடுதல் விபச்சாரக்குற்றம் (மத்தேயு 5;32) (ரோமர் 7.3), என்று பைபிள் சொல்லுகிறது.
கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா?
இப்போது உங்களுக்கு ஒரு தெளிவான ஒரு கேள்வி வந்திருக்கும் அதாவது கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா? என்று, இதற்கு பதில் மேலேயே சொல்லப்பட்டு விட்டது மேலும் இது பற்றி பைபிள் மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது 1தீமோதேயு 4;2-ன் படி கடைசி காலங்களில் இயற்கைக்கு மாறாக சந்நியாசம் ஆதரிக்கப்படும், ஆகவே அதை யாரும் செய்யவேண்டாம் என்று, இன்னும் கூட கிறிஸ்தவத்திலும் இது போன்ற சந்நியாசங்கள் உண்டு. இதற்கும் மேற்சொன்ன வசனமே சாட்சி இது குறித்து பைபிள் சொல்லும்போது மீண்டும் நமக்கு ஒரு சாத்தானின் குண நலன் நமக்கு தெரியவருகிறது அது என்னவெனில் 2 கொரிந்தியர் 11;14- நமக்கு சொல்லப்பட்ட படி சாத்தான் நம்மை வஞ்சிக்க கடவுளின் தூதன் வேடத்தைக் கூட தரித்துக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றிவிடுவான் என்று ஆகவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது
எனக்கன்பான சகோதரனே சகோதரியே நீங்கள் ஒருவேளை சந்நியாசம் போன்ற போதனையில் சிக்குண்டு இருக்கலாம், கடவுள் கொடுத்த பரிசுத்தமான பாலுணர்வை உன் வாழ்க்கைத் துணையிடத்தில் கூட வெளிப்படுத்தாமல் இருந்தால் கடவுள் மிகவும் மகிழ்வார் என்று உனக்குச் சொல்லப் படலாம், அதேபோல துணையிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய பாலுணர்வை மற்ற மனிதர்களோடும் பகிர்ந்து கொள்ளவும் நீ போதிக்கப் பட்டிருக்கலாம் இவைகள் இரண்டுமே இயற்கைக்கு விரோதமானது தான். இவைகள் இரண்டுமே சாத்தானால் கொண்டுவரப்பட்டிருக்கும் தந்திரங்கள் தான். ஆகவே இவைகளை விட்டு விலகு. கடவுள் உன்னை மேன்மைப் படுத்துவார். ஆமென்.

Sunday, September 19, 2010

ஸ்மார்ட் வொர்க் (புத்திசாலித்தனமான உழைப்பு)..

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக
வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே
மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள்
நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற
இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன்.
ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த
அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும்
சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி
மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து
காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க
வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை
மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது
! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு
வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று
நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற
எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள்.
இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம்
வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று
விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்;
இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு,
வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த
4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப்
போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை
அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு
!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும்
என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால்
நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி
பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!!!!!!
 

Saturday, September 18, 2010

எனக்கு 3 தேசிய விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது பாண்டிராஜ்.

முழுக்க முழுக்க கு‌ழந்தைகளையும், குழந்தைகளின் நட்பு, சண்டை, பாசத்தையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பசங்க படத்துக்கு 3 தேசிய விருதுகள் கிடைந்துள்ளன. இந்த விருது மகிழ்ச்சியை கொண்டாடி வரும் டைரக்டர் பாண்டிராஜ் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு தேசிய விருது கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பசங்க படத்துக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று முன்பே எதிர்பார்த்தேன். என்னோட எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. அந்த படத்துக்கு சிறப்பாக வசனம் எழுதியதற்காக விருது கிடைத்து இருப்பது, உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த படத்துக்கு வசனம் எழுத ரொம்பவே நேரம் எடுத்துக் கொண்டேன். யோசித்து யோசித்து எழுதினேன். அந்த உழைப்புக்கு பலன் கிடைத்திருப்பது உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.பசங்க படத்தை தயாரித்த சசிகுமார் கூறுகையில், `பசங்க படத்துக்கு சிறந்த படம், சிறந்த வசனம், சிறந்த குழந்தை நட்சத்திரம் என மூன்று விருதுகள் கிடைத்துள்ளன. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.பசங்க படம் திரைக்கு வந்தபோதே நிறைய பாராட்டுகள் கிடைத்தன. இந்த படத்துக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். அந்த வாழ்த்துகள் இப்போது பலித்திருக்கிறது.இப்படியொரு பெருமை கிடைப்பதற்கு ரசிகர்கள் மற்றும் டைரக்டர் பாண்டிராஜ், படத்தில் நடித்த மற்ற நடிகர்-நடிகைகள், பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்தான் காரணம். அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

தமிழ்நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வரும் நயன்தாரா பெண்கள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு.

பிரபல இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா நடிகை நயன்தாராவை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு ஜான்சிராணி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவியும் மனித உரிமை கழகம் (சர்வ தேச அமைப்பு) மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளருமான கல்பனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடிகர் பிரபுதேவாவின் மனைவி ரம்லத். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.ரம்லத்தை புறக்கணித்து இப்போது அவர் நயன்தாராவுடன் சுற்றுகிறார். மும்பையில் அளித்த பேட்டியில் நயன்தாராவை விரைவில் திருமணம் செய்வேன். அவர் எனக்காக பிறந்தவர். விசேஷ மானவர் அவரை பிரிந்து என்னால் வாழ முடியாது. பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையை சோலை வனமாக மாற்றினார் என்றெல்லாம் வர்ணித்துள்ளார். ரசிகர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஒருவரின் இத்தகைய வார்த்தைகள் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.நயன்தாராவை திருமணம் செய்வது தனிப்பட்ட விஷயம் என்கிறார். தனது மனைவியை துன்புறுத்தி இன்னொரு பெண்ணை மணப்பது அவருக்கு வேண்டுமானால் தனிப்பட்ட விஷயமாக இருக்கலாம். இது பெண்களுக்கு எதிரான ஒரு பொது பிரச்சினை. பெண்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் அதை தட்டிக்கேட்கும் உரிமை எங்களுக்கு உண்டு.பிரபுதேவா- தனது மனைவியை துன்புறுத்தி நயன்தாராவை மணந்தால் இருவரது படத்தையும் தமிழக பெண்கள் புறக்கணிப்பார்கள். ரம்லத்துக்கு எதிராக நடைபெறும் அநிதியை தடுத்து நிறுத்த போராட்டத்தில் குதிப்போம். பிரபுதேவாவிடம் இது பற்றி நடிகர் சங்கம் விசாரித்து ரம்லத்துக்கு நீதி கிடைக்க வழி வகை காண வேண்டும். இல்லாவிட்டால் நடிகர் சங்கம் முன்பும் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.நயன்தாராவுக்கும் பெண்கள் சங்கம் மூலம் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறோம். இனனொரு பெண்ணின் வாழ்க்கையில் புகுந்து அந்த குடும்பத்தை சீரழித்தால் சும்மா விடமாட்டோம். சென்னையில் எந்த விழாவுக்கு சென்றாலும் கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம். தமிழ்நாட்டில் கலாசார சீரழிவை ஏற்படுத்தி வரும் நயன்தாராவை கண்டித்து அனைத்து பெண்கள் அமைப்புளும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்று எச்சரிக்கை விடுக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறினார்.  

Thursday, September 16, 2010

பழகுவதற்கு முன் என்னை பற்றி
ஓட்டு போட்டவர்கள்
தரவரிசை

Wednesday, September 15, 2010

இன்றைய மொக்கைகள் ப்ளீஸ் இத படிக்காதீங்க..

1) True GK Facts:
**
அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
**
ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
**
பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
**
என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....


2)
ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி -
14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி -
14 !!

3)
மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது
?

4)
உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1.
சிரிப்பு
2.
அழகு
3.
நல்ல டைப்
4.
கொழந்த மனசு...
5.
இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

6)
அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்
'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

7)
முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....


8)
தத்துவம் 2012
"
லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"
கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்
'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....


9)
அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

10) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...
11) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

12) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது
?....
13) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில்
Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசங்கள்

1.பெண்களிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டால் நிச்சயம் விஜய்,அஜித்,சூர்யா,மாதவன் என்று கல்யாணம் ஆன நபர்களின் பேரே வரும்.ஒரு குரூப்புக்கே (நான்கு முதல் ஐந்து வரை) ஒரே ஒரு ஹீரோவின் பேர் தான் இருக்கும்.இதுவே ஆண்களிடம் கேட்டால் லேட்டஸ்ட் நாயகியின் பேரை மந்திரமாக உச்சரிப்பார்கள் (அவர்களுக்கு கல்யாணம் ஆகும் வரை தான் அதுக்கு அப்புறம் அது போன மாசம் கதைதான்)

2.பெண்கள் பெரும்பாலும் ஒத்த ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.( ஒரே சென்ட் உபயோகிப்பார்கள்,ஒரே மாதிரி சாப்பாடு ஆர்டர் செய்வார்கள்)ஆண்கள் மாறுப்பட்ட ரசனை உள்ளவர்களிடம் நட்பாக இருப்பார்கள்.(அப்பதான் விவாதம் என்று வந்தால் மாத்தி மாத்தி கிழிக்க முடியும்.)

3.பெண்களுக்கு அனுபவசாலிகளை ரொம்ப பிடிக்கும்( அது தெரிந்து தான் எனக்கு ஏற்கனவே லவ் பெயிலியர் இந்த பிட்ட பசங்க ஆயுதமா போடுறாங்க)ஆண்களுக்கு அனுபவசாலிகளை கண்டாலே பிடிக்காது காரணம் அட்வைஸ்.( அனுபவத்தில் தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள் நெருப்பு சுடும் என்பதை கையை விட்டு தான் தெரிந்து கொள்வார்கள்.)

4.பெண்களுக்கும் சண்டை வரும் பொழுது ரகசியங்கள் வெளியே வந்தே ஊரே சிரிக்கும். ஆண்கள் சண்டை போடும் பொழுது சேர்ந்து செய்த மிக பெரிய தவறை சாமர்த்தியமாக மறைத்து விட்டு சண்டை போடுவார்கள்

5.பெண்கள் பெரும்பாலும் மிக சரியாக யோசித்து தவறாக முடிவு எடுப்பார்கள்.செயல்படுத்தும் பொழுது சரியாக நடக்கும் (girl's thing என்று பந்தா செய்வார்கள்)ஆண்கள் யோசிக்கவே மாட்டார்கள் எண்பது சதவீதம் சரியாக இருக்கும் ஆனால் நடக்காது. இருபது சதவீதம் தவறாக இருக்கும் உடனே நடந்து விடும்.

6.பெண்கள் அவர்களது கருத்துக்கு உடன் படும் ஆண்களை ரொம்ப பிடிக்கும்
(எப்பவும்மே இப்படிதானா).ஆண்களுக்கு எதிர் கருத்து சொல்லும் பெண்களை ரொம்ப பிடிக்கும்.(காதலிக்கும் பொழுது மட்டும் )

7.ஒரு விசயத்தில் பெண்கள் என்னுடைய பாட்டி காலத்தில் இருந்தே மாறவில்லை.(1970 ஆம் ஆண்டு இருந்த பெண் சுதந்திரத்திற்கும் இப்பொழுது இருக்கும் பெண் சுதந்திரத்திற்கும் நிறைய வித்தியாசம் உண்டு இன்னும் வரும் ஆண்டுகளில் இதுவும் மாறும் அப்பொழுதும் எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்றே சொல்வார்கள்) ஆண்கள் எப்பொழுதுமே பெண்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.புரிந்து கொள்ளவே முடியாது.மாறி கொண்டே இருக்கிறார்கள்
இந்த விசயத்தில்.ஆண்களை வளர்ப்பதே பெண்கள் தான்.

8.பெண்கள் ஆண்கள் கண்டுப்பிடிப்பதை எடுத்து கொள்வார்கள்.
(ஹைஹீல்ஸ் ஆண்களுக்காக கண்டுப்பிடித்தது)ஆண்கள் வேறு எதாவது செய்ய போய் விடுவார்கள்.

Tuesday, September 14, 2010

பயம்.. பயம்.. பயம்

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது போஃயாக்கள் பற்றிய ஒரு தளம் கண்ணில் மாட்டியது, அங்கு போய்ப்பார்த்தால் பயம் என்ற நோய்க்கு A-Z நோயின் பெயருடன் விளக்கம் கொடுத்திருந்தார்கள். சில வித்தியாசமான நகைக்கத்தோன்றும் போஃபியாக்கள் மட்டும் நான் தெரிவு செய்து இங்கே பகிர்ந்திருக்கிறேன். 

Ablutophobia - துவைத்தல் மற்றும் குளிப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Achluophobia - இருட்டைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Acousticophobia - சத்தத்தைக் கேட்டு ஏற்படும் பயம்.
 
Agyrophobia - வீதியைக்கடக்க ஏற்படும் பயம்.
 
Ailurophobia - பூனையைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Allodoxaphobia - அபிப்பிராயங்களால் உருவாகும் பயம்.
 
Ambulophobia - நடப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Anablephobia - மேலே பார்ப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Androphobia - ஆண்களைக்கண்டால் ஏற்படும் பயம்.
 
Anuptaphobia - திருமணமாகாமலிருப்பதால் ஏற்படும் பயம்.

Arithmophobia -இலக்கங்களைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Atychiphobia - தோல்விகளால் ஏற்படும் பயம்
 
Automysophobia - சுத்தமற்றிருப்பதால் ஏற்படும் பயம்.
 
Bibliophobia - புத்தகங்களால் ஏற்படும் பயம்
 
Caligynephobia - அழகான பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்
 
Catoptrophobia - கண்ணாயைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Chaetophobia - தலைமுடியால் ஏற்படும் பயம்.
 
Chronophobia - நேரப்பயம்.
 
Clinophobia - படுக்கைக்கு செல்வதற்கான பயம்.
 
Cyberphobia - கணணியில் வேலைசெய்வதற்கு ஏற்படும் பயம்.
  
Didaskaleinophobia - பாடசாலை செல்ல ஏற்படும் பயம் 

Domatophobia - வீட்டில் இருப்பதால் ஏற்படும் பயம்.

Epistemphobia - அறிவுக்கான பயம்.

Eremophobia - தனிமைப்பயம்.

Ergophobia - வேலை செய்வதற்கான பயம்.

Euphobia - நல்ல செய்தி கெட்பதற்கான பயம்.

Gamophobia - திருமணப்பயம்.

Gerascophobia - வயது போவதால் உண்டாகும் பயம்.

Gynephobia - பெண்களைக்கண்டு உண்டாகும் பயம்.

Ideophobia - கருத்துக்களுக்கு ஏற்படும் பயம்.

Kathisophobia - கீழே உட்காருவதற்கு ஏற்படும் பயம்.

Myrmecophobia - எறும்புகளைப்பார்த்து ஏற்படும் பயம்.

Nostophobia - வீடு திரும்புவதற்கான பயம்.

Parthenophobia - இளம்பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்.

Pedophobia - குழந்தைகளைப்பார்த்து ஏற்படும் பயம்.

Philemaphobia - முத்தமிடுவதற்கான பயம்.

Phronemophobia - யோசனை செய்வதற்கான பயம்.

Scriptophobia - பொது இடத்தில் எழுதுவதற்கான பயம்.

இந்த போஃபியாக்களின் பற்றித்தெரிந்ததும் பயப்படுறீங்களா? உங்களுக்கு Phobophobia என்ற போஃபியா இருக்கு..ஹீஹீ

ஐயோ படிக்கலயே..


பரீட்சை
எனக்கு
லீவு நாட்களைத்தான்
அதிகம் பிடித்திருக்கிறது
அந்த நாட்களில்தான்
உன் தொல்லையிலிருந்து
ஓய்வெடுக்கலாம்

கேள்வி
நீ எந்தப் பேப்பரிலும்
கஷ்டமாகத்தான் இருக்கிறாய்
தவணையில் வரும் போது
இன்டெக்ஸ் நம்பருடன்
கூடிய கஷ்டமாகிறாய்

பிட்டு
எனக்கு மட்டும் என்று நினைத்து
இதுவரை எழுதிவந்தேன்
நீ கேட்டதும் கேட்காமலேயே
ஓடுகிறதே பிட்டு பேப்பர்

பரீட்சை நேரசூசி
சொல்லிவிட்டுத்தான்
நீ வருகிறாய் என்றாலும்
நீ வந்த பிறகே
நினைக்கிறது அந்த மனது
ஐயோ படிக்கலயே

புத்தகம்
படிப்பதைவிட
என்னுடம் உறங்கவே
நேரம் சரியாக இருக்கிறது
என் புத்தகத்துக்கு

விடைத்தாள்
உன்னில் கிறுக்குபவருக்கெல்லாம்
வாரி வழங்குகிறாய்
உன்னை ஒன்றுமே செய்யாத
எனக்கு அப்பாவின்
அடியை மட்டும் பரிசளிக்கிறாயே!

பி.கு –ஆங்.. யாருய்யா அது கத்தி எடுக்கிறது #எஸ்கேப்

போறாளே பொன்னுத்தாயி... - சுவர்ணலதா நினைவஞ்சலி !!

போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்... 
ஓடும் பொன்னி ஆறும்...பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேரின்பம்...கானும் நேரம் ஆனந்தம்

என்று ஆரம்பித்த சுவர்ணலதாவின் திரையிசை வாழ்க்கை இவ்வளவு சீக்கிரமாக முடிவிற்கு வருமென்று யாரும் நினைத்திருக்க மாட்டோம். என்னுடைய இசைத்தொகுப்பில் சுவர்ணலதாவின் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் தான். எத்தனை விதமான பாடல்கள்? பாடல்களில் உணர்ச்சிகளை, வேறுபாடுகளை வெளிப்படுத்தியதில் எஸ்.ஜானகிக்கு அடுத்த படியான இடத்தில் இவரை வைப்பேன். 

மாலையில் யாரோ மனதோடு பேச..
மார்கழி வாடை மெதுவாக வீச..

என்ற வரிகளைக் கண்ணை மூடிக் கேட்கும் பொழுது அப்படியே மனதை மயிலிறகால் வருடியதைப் போன்ற உணர்வு வருவதை மறுக்கவே முடியாது. பாடல் வரிகளில் உள்ள தனிமையை அவ்வளவு அழகாக வெளிப்படுத்திய பாடலிது. தூக்கம் வராத பொழுதுகளில் இப்பாடல் தாலாட்டாக இருந்திருக்கிறது.

என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்

என்று "வள்ளி" படத்தில் வரும் பாடலில் வெளிப்படுத்திய உணர்வுகளை வேறெந்த பாடலிலும் பெற முடியாது. 

"மாசிமாசம் ஆளான பொன்னு
மாமன் உனக்குத் தானே"

என்ற லேட் நைட் ரகப் பாடலை வெகுநேர்த்தியாகப் பாடியிருப்பார். பாடலிற்குத் தேவையான உணர்வைக் கொண்டுவருவதில் ஜானகிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் என்று கூறியதும் இது போன்ற பாடல்களை நேர்த்தியாகப் பாடியதால் தான்!!

இளையராஜாவின் இசையில் அறிமுகம் ஆனாலும் அவர் அளவிற்கு ரகுமானாலும் பயன்படுத்தப்பட்ட "ராஜா காலத்துப் பாடகி"யென்றால் சுவர்ணலதாவாகத்தான் இருப்பார். ரகுமானின் ஆரம்பகாலப் படங்களில் இருந்தே ஒவ்வொரு படத்திலும் ஒன்றோ இரண்டோ பாடல்களைப் பாடிவந்தவர்.

இன்றைய இளம்தலைமுறைப் பாடகிகள் மெல்லிசை, உற்சாகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வேகமான பாடல்கள் என்று ஏதாவதொரு வகையான பாடல்களை மட்டுமே பாடுவதைக் கேட்க முடியும். (சின்மயி இதில் விதிவிலக்கு). ஆனால் குத்துப்பாடல்கள், வேகமான பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஃபாஸ்ட் நம்பர்ஸ் என எல்லா வகையான பாடல்களிலும் பிரகாசித்தவரென்றால் ஜானகிக்கு அடுத்தபடியாக இவரைத் தான் எண்ண முடிகிறது. இவரை ஆல்ரவுண்டர் என்றால் மிகையில்லை.

"முக்காலா முக்காபுலா " - காதலன்
"உசிலம்பட்டி பெண்குட்டி" - ஜெண்டில்மேன்
"அக்கடான்னு நாங்க எடை போட்டா" - இந்தியன்
"குச்சி குச்சி ராக்கம்மா.. " - பம்பாய்
"மெல்லிசையே.. என் இதயத்தில் மெல்லிசையே" - Mr. ரோமியோ
"உளுந்து விதைக்கையிலே" - முதல்வன்
" ஒரு பொய்யாவது சொல் கண்ணே" - ஜோடி
"பூங்காற்றிலே " - உயிரே.
"குளிருது குளிருது" - தாஜ்மஹால்
"எவனோ ஒருவன்" -அலைபாயுதே

என்று ஒவ்வொரு வருடத்திலும் ஹிட் பாடல்களுக்கு உயிர் கொடுத்து முனுமுனுக்க வைத்தவர்.

"காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்" பாடலில் சுவர்ணலதாவின் வரிகள் வரும் இடங்களில் எல்லாம் உச்சத்திற்குச் சென்று வருவது அவ்வளவு நேர்த்தியாக இருக்கும்.

ரகுமான், ஒரே படத்தில் வெவ்வேறு விதமான பாடல்களைப் பாட வைத்ததும் இவரை மட்டும் தான் என்று நினைக்கிறேன். ரட்சகன் படத்தில் "மெர்க்குரிப்பூக்கள்" என்ற பெப்பி பாடலைப் பாட வைத்து, "லக்கி லக்கி" என்ற மாறுபட்ட பாடலையும் பாட வைத்தார். இன்று ஓரிரு பாடல்கள் ஹிட் கொடுத்த பாடகிகள் எல்லாம் "ஆஹா ஓஹோ.." என்று பரபரப்பாக வலம்வரும் பொழுது கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களைப் பாடிய "சுவர்ணலதா"வை உரிய இடத்தில் வைத்திருக்கத் தவறிவிட்டார்களோ(டோமோ)? என்று தோன்றுகிறது. இவரது புகைப்படத்தை கூகுளில் தேடினாலும் ஓரிரு படங்களே கிடைத்தன.

இவரைப் பற்றிய கட்டுரை எழுதலாம் (இவர் இல்லை என்ற பிறகு) என்று பார்த்தால், நான் கவனிக்கத் தவறிய எத்தனையோ பிரபலமான பாடல்களை இவர் பாடியுள்ளது தெரிகிறது.

"ஒரு நாள் ஒரு பொழுது 
உன் மூஞ்சி காண்காம
உசுரே அல்லாடுதே

மறுநா வரும்வரைக்கும்
பசித்தூக்கம் கொள்ளாமல்
மனசு அல்லாடுதே"

என்று "அந்திமந்தாரை"யில் வரும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்!! பாடலிற்கு இசையே தேவையில்லை என்னும் அளவிற்கு இவரது ஆளுமை இப்பாடலில் தெரியும்.

இளையராஜா, ரகுமான் மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல வெற்றிப் பாடல்களைப் பாடியவருக்கு மகுடம் சூட்டியது கருத்தம்மாவில் வந்த போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலில். இந்தப் பாடலிற்காக தேசியவிருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. சுவர்ணலதாவைப் பற்றி கட்டுரை எழுத நினைப்பவர்கள் "போறாளே பொன்னுத்தாயி" என்ற வரிகளைக் குறிப்பிடாமல் இருக்கப்போவதில்லை. கருத்தம்மாவில் இப்பாடல் மகிழ்ச்சி, சோகம் என்று இரண்டு முறை வரும். அதில் சோகமான பின்னனியில் வரும் வரைகளைத் தான் இந்தக் கட்டுரையில் குறிப்பிடத் தோன்றுகிறது. 

"போறாளே பொன்னுத்தாயி 
பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு"

இன்று சுவர்ணலதா மறைந்துவிட்டாலும், "மாலையில் யாரோ மனதோடு பேச"வும் "மலைக்கோயில் வாசலில் கார்த்திகை தீபமும்" என் அலைபேசியிலும் இசைக்கோப்பிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதனுடன் சுவர்ணலதாவின் நினைவும்!!